தனிச் சிறப்புக்கள்
என் மண்ணுக்கென்று பல தனிச் சிறப்புக்கள் உண்டு. இந்தியாவிலேயே கல்வியறிவில் முதன்மையான மாவட்டமான கன்னியாகுமரியிலுள்ள பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதியின் ஒரு அங்கம் தான் என் நேசத்திற்குரிய மண். வரலாற்று சிறப்புமிக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரம் பத்மனாபபுரம் இங்கிருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர் தூரம் தான். எழில் மிகு அரண்மனையும் இவ்விடமுண்டு.
கன்னியாகுமரியின் தந்தை என்று எங்களால் போற்றப்படும் நேசமணி அவர்களின் இடைவிடாத போராட்டத்தினால் கன்னியாகுமரியின் மாவட்டத்தின் ஒரு பகுதி கேரளாவிலிருந்து பிரிந்து தமிழ் நாட்டோடு இணைக்கப்பட்டதோடு இவ்வரண்மனையும் தமிழ் நாட்டோடு ஐக்கியமாகி விட்டது. எனினும் இதன் பராமரிப்பு தற்போதும் கேரள அரசின் கையிலேயே உள்ளது.
என் மண்ணின் தனிச் சிறப்புக்கள் சில:
1. இந்தியாவிலேயே மிகப்பழமையான (சிலரால் இந்தியாவின் முதல் தேவாலயம் என அழைக்கப்படுகிறது) கிறிஸ்தவர்களின் புனித ஆலயம் என் மண்ணில் இடம் பெற்றுள்ளது.
2. தென்னகத்தில் ஆரம்ப காலங்களில் இஸ்லாத்தினை பரப்புவதில் மிகப் பெரும் தொண்டாற்றிய மகான் மாலிக் முகம்மது ஒலியுல்லா அவர்களின் கல்லறையுடன் இணைந்த பள்ளிவாயில் என் மண்ணின் மையத்தில் கண்கவர் காட்சியாக இடம் பிடித்துள்ளது.
3. இந்துக்களின் ஒன்பது சிவஸ்தலங்களில் ஒன்று என் மண்ணில் அமைந்து என் மண்ணின் பெருமையை சுற்றிலும் உள்ள மக்களுக்கு எடுத்தியம்புகிறது. சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறும் பக்தர்கள் என் மண்ணின் மையமான நடுக்கடையை தடவாமல் மேலே செல்ல முடியாது.
4. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயங்களின் மக்களை அன்போடு அரவணைத்து செல்லும் ஒரு மத சகிப்புத் தன்மை மிக்க மண் என்று என் பாசத்துக்குரிய தாய்மண்ணினை குறிப்பிடலாம்.
ஒவ்வொரு ஆலயங்களின் திருவிழாவிற்கு மற்ற சமுதாய மக்கள் எவ்வித வேற்று வெறுப்புமின்றி கலந்து கொள்வதிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம்.


0 Comments:
Post a Comment
<< Home